Sunday, November 9, 2008

அமைச்சரவை அங்கீகாரத்தை எதிர்பார்த்துள்ள தோட்டச் சேவையாளர்கள்

இலங்கையின் பெருந் தோட்டங்களில் பணியாற்றிவரும் தோட்ட சேவையாளர்கள் தங்களின் பல வருட சேவையின் பின் அவர்களுக்கென்று காணி இல்லை. ஓய்வு பெற்றபின் வீடின்றி உறவினர்கள் வீடுகளிலும், வாடகை வீடுகளிலும் இருக்கும் நிலை தொடர்பா இவர்கள் அங்கம் வகிக்கும் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாத் அமரசிங்க தெரிவிக்கையில் 485 பேருந்தோட்டங்களில் பணிபுரியும் தோட்ட சேவையாளர்கள் சுமார் 15,000 இற்கு மேற்பட்டவர்களாவர். இவர்களில் 95 வீதமானவர்கள் இத் தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்கிறார்கள். அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை என நிர்வகித்து வந்த இத் தோட்டங்கள் நிர்வாக சீர்கேடு, நட்டம் என்பவற்றால் 1992ம் ஆண்டு தனியார் கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. அரசு தோட்டங்களை நிர்வகிக்கும் போது 1965ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில், சம்பள ஒப்பந்தம் உட்பட மாற்றங்களை செய்தது போலவே 1993ம் ஆண்டு கூட்டு ஒப்பந்தம் கோரிக்கைளை ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ள முடிந்தது என்றார்.

தற்போது 20 தனியார் கம்பனிகள் 425 தோட்டங்களையும், அரசு பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி சபையும் குருநாகல் பிளான்டேசன், ஆகியன 60 தோட்டங்களையும் நிர்வகிக்கின்றன. மொத்தமாக-485 தோட்டங்கள்.
இவர்களுக்கான காணிப்பிரச்சினை பல வருடகாலமாக இழுபறியில் உள்ளது. அமைச்சரவையின் அனுமதியை எதிர்பார்த்துள்ளோம். என்றார்
இளைஞர் யுவதிகள் உலகிற்கேற்ற வகையில் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் -எஸ்.ஆறுமுகன் தொண்டமான்

மலையக இளைஞர் யுவதிகள் உலகிற்கேற்ற வகையில் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் அவர்களின் நலன் கருதி அவர்களுக்குரிய தொழில் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும் வகையில் உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டலையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் சமூக,பொருளாதார அபிவிருத்தியமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் இலங்கை - இந்திய சமுதாயப் பேரவை பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்திப் பொறுப்பு என்பனவற்றோடு இணைந்து இளைஞர் வலுவூட்டல் சமூக,பொருளாதார அபிவிருத்தியமைச்சு ஆரம்பித்துள்ள இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான அறிவூட்டல் செயலமர்வை அட்டனில் ஆரம்பித்து வைத்துப்பேசியபோது தெரிவித்தார். இந்த நிகழ்வில் பிரதியமைச்சர்களான முத்து சிவலிங்கம் எஸ்.ஜெகதீஸ்வரன் உட்பட பெருந்தோட்டப்பகுதிகளைச்சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கான வழிகாட்டல் ஆலோசனைகளை இந்தியா மற்றும் இலங்கையைச் சேர்ந்த வளவாளர்கள் வழங்கினர்.
சோல்பரி திட்டத்தின் அநீதி பற்றி முதற்படி

இலங்கையில் எல்லா இந்திய அபிப்பிராயங்களையும் தழுவி ஓர் உருவாய் திகழும் காங்கிரஸ் மகாசபை சோல்பரி சிபாரிசுகளை நவம்பர் மாதம் 14ம் திகதி 1945-ல் காரிய கமிட்டியில் பரிசீலனை செய்ததில் கண்ட முடிவு டொனமூர் திட்டத்தில் வழங்கப்பட்ட உரிமைகள்.
மன்னர் பிரான் 1943-ம் வருட உள்நாட்டு ஆட்சிப் பிரகடணம். இவைகளெல்லாம் சோல்பரி திட்டத்தில் அலட்சியம் செய்யப்பட்டிருக்கின்றன. இலங்கையின் சுதந்திரமே நமது இலட்சியம். ஆட்சி அதிகாரம் நாட்டு மக்கள் கைக்கு மாற்ற வேண்டுமென்பதே நம் நோக்கம். எனினும் சம அந்தஸ்தும் நியாயமாய் எமக்கு அரசியலில் கிடைக்க வேண்டிய ஸ்தானமும் தேசிய பிளவை ஏற்படுத்துவதோடு இந்தியரை பயங்கரமான அடிமைத்தனத்தில் ஆழ்த்துகின்றது.
சிறுபான்மையோருக்கு நியாயம் வழங்குவதே கமிஷனர்களின் முதன்மையான நோக்கமாயிருந்தும் மந்திரிமார் நகல் திட்டத்தை தழுவித் தயாரித்தபடியால் சோல்பரி கமிஷன் சிறுபான்மையாயோர் உரிமைகளை பலிகொடுத்திருக்கின்றன. திட்டவட்டமான இந்தியர் அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்த நாடெங்கும் 1945ம் ஆண்டு அக்டோபர் 21 முதல் 28ம் திகதி வரையிலும் சோல்பரி திட்ட அநீதிக்கு எதிரான கூட்டங்கள் நடத்தப்பட்டன.
சிபாரிசுகளை வன்மையாக கண்டித்து சர்க்காருக்கு தந்திகள் அனுப்பப்பட்டன. சர்க்கார் மனமாற்றம் செய்து கொள்ளத் துணியவில்லை. பாட்டாளிகள் உள்ளத்தில் ஒரு கலவரம் பீதி பற்றிக் கொண்டது. அஸீஸ் முதல்வராக திரு. வைத்திலிங்கம் தூது கோஷ்டி தாய்நாடு சென்றது. இந்திய தேசிய தலைவர்களிடம் அஸீஸ் கூறியதாவது.

கடல் கடந்த இந்தியர்கள் பாரத தேசத்தின் பிரஜைகளாக இருக்க முடியாது. இலங்கையில் வாழும் இந்தியர்கள் இலங்கை பிரஜைகளாக ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும். இலங்கைத் தீவின் வளர்ச்சிக்காக தொழிலாளர் சமூகம் இரத்தம் சிந்தியது அல்லாமல் அவர்கள் எலும்புகள் கடந்த நூற்றாண்டுகளாய் தேசத்திற்கு உரமாயிருக்கின்றன.

கைத் தொழில்கள், பாலங்கள், வீதிகள், ரயில் பாதைகள் மற்றும் கட்டிடங்கள் இவைகளுக்கெல்லாம் இந்தியர் உழைப்பே காரணமாகும் என்றார்.
அதேநேரம் தொழில் ஆணையாளருக்கு கீழ்வரும் தந்தி செய்தி அனுப்பப்பட்டது. சோல்பரி சிபாரிசுகள் இந்தய தொழிலாளர்களுக்கு இழைத்திருக்கும் அநீதியை எதிர்க்க டிக்கோயா, டிம்புல பகுதியிலுள்ள 400 தோட்டங்களில் வதியும் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமே தக்க ஆயுதமாகக் கருதுகிறோம்.

ஐந்து வருடங்கள் இலங்கையில் வசித்தவர்களுக்கு பிரஜாவுரிமை ஓட்டுரிமை வேண்டும். இதனால் 400 தோட்டங்களிலுள்ள தலைவர்களும் அட்டன், கொட்டக்கலை, தலவாக்கலை, பூண்டுலோயா காங்கிரஸ் நிர்வாகஸ்தர்களைக் கொண்ட தூது கோஷ்டி 28-10-1945-ல் துவங்க நோட்டீஸ் கொடுக்க உத்தேசித்திருக்கிறது. கவர்ணருக்குத் தெரியப்படுத்தவும் . ஆதாரம் முதற்படி 1950.

குறிப்பு:- இந்தியர், பாகிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம் வரும் முன்பே சோல்பரி திட்டத்தில் இந்திய வம்சாவளியினர் ஒடுக்கப்பட்டனர் என இந்தத் தகவல் தருகிறது.
நன்றி- சத்தியம்