Friday, June 26, 2009

1950 களின் பின் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளே மக்கள் இன்றும் அகதிகளாக உள்ளனர். – திஸ்ஸ விதாரண

இலங்கையில் 1950 களின் பின்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளே எமது மக்கள் அகதிகளாவதற்கு காரணமாக அமைந்துள்ளன என்று இந்திய அகதிகள் முகாமில் தங்கியுள்ள இந்திய வம்சாவளி மக்களுக்கு பிரஜா உரிமை வழங்கும் பிரேரணை தொடர்பாக உரையாற்றிய விஞ்ஞான கைத்தொழில் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையி;ல் பிரஜாவுரிமை பறிக்கப்பட்ட மலையக மக்களுக்கு இன்னும் அது பூரணமாக வழங்கப்படவில்லை என்பதும் அவர்கள் நாடற்ற பிரஜைகளாக அடையாளப்படுத்தப்பட்டிருப்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள். குடந்த காலங்கள் மறக்கப்பட வேண்டும். உடனடியாக அகதிகளாக இந்தியாவில் தங்கியுள்ள இந்திய வம்சாவளியினர் அழைத்து வரப்பட்டு அவர்கள் உரிமையுள்ள மக்களாக மாற்றப்பட வேண்டும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இலங்கையர் யாவரும் சமம். ஐக்கிய இலங்கை தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து இன மக்களும் சமமாக மதிக்கப்படுகின்றனர் என்ற செய்தியை நாம் உங்களுக்கு கூற வேண்டும். இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான சட்டமூலத்தை நிறைவேற்றினால் மட்டும் போதாது. அதனை சரியான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது.
தற்போது வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மூன்று லட்சம் மக்கள் தொடர்பில் அரசு பாரிய சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளது. இதனுடன் இந்திய வம்சாவளி மக்களது பிரச்சினையையும் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும். இதன் மூலம் ஐக்கிய இலங்கையை உருவாக்க முடியும் என்றார்.
ஆவணங்களை பெற்றுகொள்ள மத்திய மாகாணசபையின் பங்களிப்பு வேண்டும்

பெருந்தோட்டத்துறை மக்களின் அத்தியாவசிய ஆவணங்களைப் பெற்றுக்கொடுப்பதில் மத்திய மாகாணசபை முழு பங்களிப்பை வழங்க வேண்டுமென மத்திய மாகாணசபை உறுப்பினர் சதாசிவம் மத்திய மாகாணசபையின் கவனத்திற்கு கொண்டு வந்தார். இம் மக்களுக்கு பிறப்புச்சான்றிதழ், அடையாள அட்டை, வாக்களார் இடாப்பில் பதிவு தொடர்பான பிரேரணையின் போது இதனை தெரிவித்தார். பெருந்தோட்டப் பகுதியில் தேசிய அடையாள அட்டை இல்லாமைக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லாமையே. இலங்கை பிரஜை என்றவகையில் இந்த அத்தியாவசிய ஆவணங்கள் கட்டாயமாகும். இம் மக்கள் இவ் ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் பல்வேறு தடைகளை எதிர்நோக்குகின்றனர். இவற்றை பெற்றுக் கொள்வதற்கு இலகுவான நடைமுறையொன்றை அரசு அறிமுகப்படுத்த அரசு முன் வர வேண்டும் என்றார்.
தபால் சேவகர்களுக்கு சீருடை, சைக்கிள் இல்லை

பெருந்தோட்டப் பகுதிகளில் தபால் சேவையை விரிவுபடுத்தும் நோக்குடன் தபால் திணைக்களத்தினால் கடந்த டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்ட 350 தபால் சேவகர்களுக்கு கடந்த ஐந்து மாதங்கள் ஆகிவிட்ட போதிலும் சீருடை, சைக்கிள் என்பன இன்னும் வழங்கப்படவில்லை என தபால் சேவகர்கள் தெரிவிக்கின்றனர்.தற்போது தமது சொந்த சைக்கிள்களையே பயன்படுத்துகின்றனர்.மாத்தறை மாவட்டத்தில் ஆறு பேரும் காலி மாவட்டத்தில் 04 பேரும் இரத்தினபுரி மாவட்டத்தில் 16 பேரும் கொழும்பு மாவட்டத்தில் 07 பேரும் கண்டி மாவட்டத்தில் 29 பேரும் கேகாலை மாவட்டத்தில் 11 பேரும் நுவரெலியா மாவட்டத்தில் 138 பேரும் மாத்தளை மாவட்டத்தில் 13 பேரும் களுத்துறை மாவட்டத்தில் 13 பேரும் தபால் சேவகர்களாக நியமிக்கப்பட்டனர்.