Monday, November 21, 2016

சம்பள ஒப்பந்தத்தில் முரண்பாடுகள் - தொழிலாளர்கள் போராட்டம்

இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு புதிய கூட்டு ஒப்பந்தத்தில் நிர்ணயம் செய்யப்பட்ட சம்பளம் தொடர்பாக முரண்பாடுகள் எழுந்துள்ள நிலையில் தோட்ட நிர்வாகங்களுக்கு எதிராக ஹட்டனில் தொழிலாளர்கள் ஒன்று கூடிக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
17-11-2016ல்  ஹட்டன் மல்லியப்பு சந்தியில் ஒன்று கூடிய தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள உற்பத்தித் திறன் கொடுப்பனவு 140 ரூபா நிபந்தனை இன்றி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்த ஆர்ப்பாட்டத்தின் போது முன் வைத்து பேரணியொன்றையும் நடத்தினர்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரசின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் இ.தொ. கா தலைவர் முத்து சிவலிங்கம் , பொதுச் செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் உட்பட பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்களும் தொழிற்சங்க தலைவர்களும் தங்களால் முன் வைக்கப்பட்ட கண்டனம் மற்றும் கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலான வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களையும் எழுப்பினர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் ஏனைய சலுகைகள் இரு வருடங்களுக்கொரு தடவை தொழிற்சங்கங்களுக்கும் தோட்டநிர்வாகங்களுக்கு இடையில் செய்து கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தம் தான் நிர்ணயம் செய்கின்றது.
இறுதியாக 18 மாத கால இழுபறியின் பின்னர் கடந்த மாதம் புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
புதிய கூட்டு உடன்படிக்கையின் பிரகாரம் அடிப்படை சம்பளம் - 500 ரூபா, உற்பத்தித் திறன் கொடுப்பனவு - 140 ரூபா உட்பட அனைத்துக் கொடுப்பனவுகளும் அடங்கலாக நாளொன்றுக்கு ரூபா 730 சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் அக்டோபர் 15ம் திகதி தொடக்கம் நாளொன்றுக்கு 110 ரூபா சம்பள அதிகரிப்பைப் பெற முடியும் எனத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்களினால் அவ்வேளைத் தொழிலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டன.
வழமைக்கு மாறாக நாளொன்றுக்கு 18 தொடக்கம் 20 கிலோ வரை தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் எனத் தோட்ட நிர்வாகங்கள் கட்டாயப்படுத்தியிருப்பதே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
கூட்டு ஒப்பந்த்தில் எந்தவொரு இடத்திலும் நாளொன்றுக்கு 18 - 20 கிலோ தேயிலை கொழுந்து பறிக்க வேண்டும் என்ற நிபந்தனை குறிப்பிடப்படவில்லை இ.தொ கா கூறுகின்றது.
நாளாந்தம் பறிக்கப்படும் கொழுந்து நிறையத் தோட்ட நிர்வாகங்களும் தோட்ட தலைவர்களும் பேசியே தீர்மானிக்க வேண்டும் என்று தான் கூட்டு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளதாக கூறுகின்றார் இ.தொ கா தலைவரான முத்து சிவலிங்கம்.
தோட்ட நிர்வாகங்களின் இந்தச் செயல்பாடானது கூட்டு ஒப்பந்தத்தை மீறும் செயல் என்றும் அவர் தெரிவிக்கின்றார் ;
கடந்த காலங்களிலும் 18 கிலோ தேயிலை பறிக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தாலும் தோட்ட நிர்வாகங்கள் நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொண்டதாக தொழிலாளர்களினால் சுட்டிக் காட்டப்படுகின்றது.
ஏற்கனவே 610 ரூபா சம்பளத்தை பெற்று வந்த தங்களுக்கு புதிய கூட்டு ஒப்பந்தம் மூலம் 730 ரூபா கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் 590 ரூபா தான் கிடைத்துள்ளதாகத் தொழிலாளர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
நன்றி- பி.பி.சி

Saturday, November 12, 2016

மண்சரிவு அபாயம்; 29 பேர் இடம்பெயர்வு

அம்பகமுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை  பெயார்லோன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயத்தினால் 29 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். சாமிமலை சின்ன சூரியகந்தத் தோட்ட லயன் குடியிருப்பில் வசித்து வந்த எட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த 7 சிறுவர்கள் 21 பெண்கள் உட்பட 29 பேர் சிறுவர் நிலையம் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை (11) மாலை, பெய்த கடும் மழையினால் குறித்த லயன் குடியிருப்புப்  பகுதியில் 30 மீட்டர் தூரம் வரையில் வெடிப்புடன்  மண்சரிவு ஏற்பட்ட நிலையிலேயே, பாதுகாப்பின் நிமித்தம் இவர்கள் தற்காளிகமாக இடம்பெயர்ந்துள்ளனர். மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியின் அயாயம் தொடர்பில் நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துக்கு அறிவித்துள்ளதாக மஸ்கெலியாப் பொலிஸார் தெரிவித்தனர். 

140 ரூபாயை ஏப்பம்விட்ட நிர்வாகங்கள்

புதிய கூட்டொப்பந்தத்துக்கு அமைவாக ஒக்டோபர் மாத்துக்குரிய சம்பளம் தமக்கு வழங்கப்படவில்லை என தோட்டத் தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களுக்கான மாதாந்த சம்பளம், 10ஆம் திகதி தோட்டங்களில் வழங்கப்பட்டுள்ளது. புதிய கூட்டொப்பந்தத்தின்படியே இம்மாதம் சம்பளம் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். எனினும், சில தோட்டங்களில் 590 ரூபாய் என்ற அடிப்படையிலே தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இழுத்தடிக்கப்பட்டு வந்த கூட்டொப்பந்த பேச்சு, கடந்த மாதம் 19 ஆம் திகதியே முடிவுக்கு வந்தது. இதற்கமைவாக அடிப்படைச் சம்பளம் ரூ.500, உற்பத்தித்திறன் கொடுப்பனவு   ரூ.140,  நிலையான விலை கொடுப்பனவு  ரூ.30,  வருகைக் கொடுப்பனவு  ரூ.60, உள்ளடங்களாக மொத்தம் 730 ரூபாய் சம்பள தொகையுடன் புதிய கூட்டொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இச்சம்பளம் ஒக்டோபர் மாதத்திலிருந்து வழங்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஒக்டோபர் மாதத்துக்கான சம்பளம்,  தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளபோதிலும் அச்சம்பளமானது புதிய ஒப்பந்தத்துக்கு அமைவாக வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் தெரிவித்தனர். அடிப்படைச் சம்பளம் ரூ.500, வருகைக் கொடுப்பனவு ரூ.60, நிலையான விலை கொடுப்பனவு ரூ.30 இணைக்கப்பட்டு 590 ரூபாயே சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தித்திறன் கொடுப்பனவான 140 ரூபாய்,  சம்பளத்தில் இணைத்துகொள்ளப்படவில்லை என தெரிவித்த தொழிலாளர்கள், 18 கிலோகிராமுக்கும் மேலதிகமாக கொழுந்து பறித்தால் மட்டுமே முழுமையான சம்பளத்தை வழங்க முடியுமென தோட்ட நிர்வாகங்கள் தெரிவித்ததாக கூறினர். 

Saturday, November 5, 2016

தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கூட்டு ஒப்பந்தம் முடிந்த பின்னர் குறைந்த கிலோவில் கொழுந்து பறிக்கும்போது முழு நாள் சம்பளம் வழங்க முடியாது எனத் தோட்ட நிர்வாகம் தெரிவித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கரப்பத்தனை, பெல்மோரல் தோட்டத்தைச் சேர்ந்த 100க்கும்; மேற்பட்ட தொழிலாளர்கள் கொழுந்து மடுவத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவிக்கையில், 'தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்துக்கு அரை நாள் சம்பளத்தை தோட்ட நிர்வாகம் தற்போது வழங்குகின்றது. கடந்த காலத்தில்; 18 கிலோவுக்கு குறைவாகக் கொழுந்து பறித்தபோது, முழு நாள் சம்பளத்தை  வழங்கியதாகவும் கூட்டு ஒப்பந்தம் முடிந்த பின்னர் குறைந்த கிலோ கொழுந்து பறிக்கும்போது முழு நாள் சம்பளம் வழங்க முடியாது எனவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனைக் கண்டித்தே நாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். மேலும், கடந்த காலத்தில் ஒவ்வொரு நாளும் 4.30 மணியளவில் எங்களின் தொழிலை முடித்து வீடு திரும்பியதாகவும் தற்போது 5 மணிவரை கட்டாயம் தொழில் செய்ய வேண்டும் என்று தோட்ட நிர்வாகம் வலியுறுத்துகின்றது.  5 மணிவரை தொழில் செய்யும்பொழுது எமது பிள்ளைகளை பராமரிக்க முடியாத சூழ்நிலைக்குத்  தள்ளப்பட்டுள்ளோம். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டபோதிலும், இதுவரையில் சம்மந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் எமக்கு விளக்கம் கொடுக்கவில்லை. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு முன்பு நிலுவை சம்பளத்தை பெற்றுத்தருவதாக கூறிய தொழிற்சங்கம் எமக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது' என்றனர்.

12 மணித்தியாலங்கள் மழை பெய்தால் மண்சரிவு அபாயம் ஏற்படும்


நாடுமுழுவதும் தொடர்ச்சியாக பதிவாகும்;; மழை வீழ்ச்சியின் காரணமாக மண்சரிவு மற்றும் இடி, மின்னல் தாக்கங்கள் ஏற்படும் வாய்புள்ளதாகவும் அபாயம் நிலவ கூடிய பகுதிகளிலிருந்து மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
நுவரெலியா மாகஸ்தோட்டை கந்தபொல கொன்கோடியா பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படும் சாத்தியம் இருப்பதனை தொடர்ந்து 18 பேர் தங்கள் இடங்களிலிருந்து இடம் பெயர்ந்துள் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும் இதுவரையில் பாரிய அனர்த்தங்கள் எவையும் பதிவாகவில்லை என்றும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆய்வுகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார். 

இது தொடர்பாக மத்தியநிலையம் விடுத்துள்ள அறிக்கையில் கண்டி, கேகாலை, இரத்தினபுரி உள்ளிட்ட மததிய மாகாணத்தின் சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்படட்டுள்ளது. 

எதிர்வரும் 12 மணித்தியாலங்களுக்கு மலை தொடர்ச்சியாக நீடிக்கும் பட்சத்தில் மண்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதோடு மற்றும் நிலவெட்டுச் சாய்வுகள் இடிந்து விழக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கண்டி மாவட்டத்தில் கங்கதிகே கோரலை பிரதேச செயலாளர் பிரிவிற்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் எல்பத குருவிட பிரதேச செயலாளர் பிரிவிற்கும் கேகாலை மாவட்டத்தில் தெரனியகல தெஹியோவிட்ட ருவன்வெல்ல, யட்டியாந்தோட்ட,புளத்ஹோபிட்டிய,அரநாயக்க, கேகாலை, மாவனெல்ல மற்றும் கலிகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டள்ளதால் அப்பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு இடர் மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது. 

அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகும். இதனிடையே கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியமும் உள்ளது. காலி உள்ளிட்ட கரையோரத்தை அண்டிய மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 30 தொடக்கம் 40 வரையில் இருக்கும் என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.